சென்னை: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக  சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் அதனையொட்டிய வடக்கு வங்கக் கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான நிலையில், இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இது அடுத்த சில தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஒடிசா நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் , மத்திய மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி  தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.  இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மத்தியமேற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில்  நிலவக்கூடும். அதற்கடுத்த 2 நாட்களில், மேலும்  வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக தமிழகம் உள்பட தென் மாநிலங்களிலும், ஒடிசா மாநிலத்திலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஆக. 31 முதல் செப்.4-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானஅல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆக. 29-ம் தேதி (நேற்று)காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில்பதிவான மழை அளவுகளின்படிஅதிகபட்சமாக நீலகிரி மாவட்டம்பந்தலூர், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 3 செ.மீ. மழைபதிவாகியுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகின்றது. ஆங்காங்கே சாரல் மழையும் பெய்து வருகின்றது. குளிர்ந்த காலநிலையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.