சென்னை: விதிகளை மீறி வைக்கப்படும் பேனர் மற்றும் விளம்பர பதாதைகளால் பலர் பாதிக்கப்படும் நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ‘ முறையான அனுமதி பெற்றே பேனர் வைக்கப்படும் என திமுக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்”  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


ஆட்சியாளர்கள் முறையான அனுமதி பெறாமலும், விதிகளை மீறி  பேனர் வைப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற செயல்களை காவல்துறையினரும், அதிகாரிகளும் கண்டுகொள்வது இல்லை. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள்  உள்ளன. இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு  பேனர் விபத்து தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை  உயர்நீதிமன்றம்,  முறையான அனுமதி பெற்றே பேனர்கள் வைக்கப்படும் என  திமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் முன்னாள் எம்எல்ஏ இல்லத் திருமணத்திற்கு அமைச்சர் பொன்முடியை வரவேற்று திமுகவினர் பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மின்கம்பியில் கொடிக்கம்பம் உரசியதில் 12 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி பலியானார்.  இந்த சம்பவத்தை குறிப்பிட்டு விழுப்புரத்தில் சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரியும், பலியான சிறுவனுக்கு உரிய இழப்பீட்டை வழங்க கோரியும் விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று (ஜுலை 22) உயர்நீதிமன்ற  பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேனர் விவகாரத்தில்,  “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்

 “இதை ஒரு பாடமாக எடுத்து கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே பேனர்கள் வைக்கப்படும் என அனைத்து அரசியல் கட்சிகளும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், முதலாவதாக ஆளும் கட்சியான  திமுக தரப்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய
வேண்டும்  என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூலை 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.