சென்னை: சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடைபெற்ற  சிட்டி யூனியன் வங்கியின் 120-வது நிறுவன நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய குடியரசு தலைவர் முர்மு, இந்திய பொருளாதார வளர்ச்சியில் வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று புகழாரம் சூட்டினார்.

  சிட்டி யூனியன் வங்கியின் 120-வது நிறுவன நாள் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. இதில்,  தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, சிறப்பு விருந்தினராக  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர் கீதா ஜீவன் உள்பட  ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், பேசிய  குடியரசுத் தலைவர் முர்மு, உலகில் விரைவாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரங்களில் இந்திய பொருளாதாரம் உள்ளதாகவும், இந்த வளர்ச்சியில் வங்கிகள் முக்கியப் பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.மேலும் அவர் பேசுகையில், மாறிவரும் பொருளாதார சூழலில், மக்களின் விருப்பங்கள் பெருமளவில் விரிவடைந்துள்ளதாகவும், நிதி பரிவர்த்தனைகளுக்கு அப்பால் வங்கிகளின் பங்களிப்பு விரிவடைந்துள்ளதாகவும் தெரிவித்தவர்,  வங்கிகள் செல்வத்தின் பாதுகாவலர்கள் மட்டுமின்றி, தற்போது அவை பல்வேறு நிதி சேவைகளை வழங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய வங்கிகள் உள்ளடக்கிய மற்றும் நீடித்த வளர்ச்சிக்கும் கருவியாக உள்ளது  என்றவர், நாட்டின் வளர்ச்சியின் முக்கிய தூண்களில் ஒன்று நிதி உள்ளடக்கமாகும். அதாவது ஒவ்வொரு குடிமகனும் குறைந்த கட்டணத்தில் நிதி சேவைகளை அணுகுவதை உறுதி செய்வதாகும் என்று குடியரசு தலைவர் கூறினார். நிதி உள்ளடக்கத் துறையில் சிட்டி யூனியன் வங்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது  என்று கூறியதுடன்,   வங்கிகள் மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், விளிம்புநிலை சமூகங்களுக்காக வடிவமைக்கப்பட்ட பயனாளர்களுக்கு உகந்த மொபைல் செயலிகள், நுண் கடன்கள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகின்றன என்று அவர் கூறினார். பேமண்ட் வங்கிகள், டிஜிட்டல் வேலட் மற்றும் வங்கி ஊழியர்கள் மூலம் நிதி சேவைகள் ஊரகப் பகுதிகளில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுவதாக குடியரசு தலைவர் குறிப்பிட்டார்.