ஞ்சாவூர்

தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்து இன்று டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு  போராட்டம் நடந்து வருகிறது.

தமிழகத்துக்கு உரிய காவிரிநீரைத் திறக்காத கர்நாடக அரசைக் கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடையடைப்பு போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் மற்றும் பிற அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர், வணிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தையொட்டி டெல்டா மாவட்டங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணிக்குத் தொடங்கிய கடையடைப்பு போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.  இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியலில் ஈடுபடவும் போராட்டக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இதைப் போல் கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த கடையடைப்பு போராட்டத்தால் டெல்டா மாவட்டங்களில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.