டெல்லி: பிரபல மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத்  மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் இன்று அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.. முன்னதாக  வினேஷ் போகத்  தனது ரயில்வே பணியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பி உள்ளார்.

இரு மல்யுத்த வீரர்களும் நேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை சந்தித்து பேசிய நிலையில், அவர்கள் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைக்கின்றனர். அவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சி சார்பில் அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  பிரபல மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகிய இருவரும் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்,  நேற்று இருவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். இதை  காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், வெளியிடப்பட்டது. இதனால், அவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று மாலை 3மணி அளவில் அவர்கள் இருவரும்  காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் காரணமாக, வினேஷ் போகத் ஏற்கனவே பணியாற்றி வந்த ரயில்வே பணியை ராஜினாமா செய்து, கடிதம் அனுப்பி உள்ளார். அதை தனது சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பாஜக எம்.பி.,யும், முன்னாள் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தலைவருமான பிரிஜ் பூஷன் ஷரன் சிங்கிற்கு எதிராக 2023 இல் நடந்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் மீதான போராட்டத்தில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். அப்போது, அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தல்களத்தில் களமிறக்கப்பட உள்ளனர்.

ஹரியானா  சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், 66 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அந்த பட்டியலில் மல்யுத்த வீரர்கள் இருவரின் பெயரும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரியானா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் போட்டி? ராகுல் காந்தி உடன் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா சந்திப்பு!