மெல்போர்ன்:

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த முதல் உறுப்பினர் என்ற பெருமையை லாரிசா வாட்டர்ஸ் என்ற உறுப்பினர் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இடதுசாரிகள் பசுமை கட்சியின் துணைத் தலைவரான லாரிசா வாட்டர்ஸூக்கு பெண் குழந்தை பிறந்து 10 வாரங்களே முடிந்துள்ளது. இவருக்கு தற்போது 40 வயது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி தனது குழந்தையான அலியா ஜாயுடன் நாடாளுமன்றத்திற்கு வந்தார்.

நாடாளுமன்ற நடந்து கொண்டிருந்த சமயத்தில் அவர் தனது குழந்தைக்கு சகஜமாக தனது இருக்கையில் அமர்ந்து கொண்டே தாய்ப்பால் கொடுத்தார். இது தொடர்பான புகைப்படம் வெளியானது. இதற்கு ஏகப்பட்ட வரவேற்பு குவிந்துவிட்டது. இதை கண்டு வாட்டர்ஸூக்கு ஒரே ஆச்சர்யம்.

‘‘குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது சர்வதேச அளவில் செய்தியாகிவிட்டதே. ஆண்டாண்டு காலமாக பெண்கள் குழந்தைக்கு பால் கொடுத்து வருகின்றனர். அதை தான் நானும் செய்தேன்’’ என்றார்.

ஆனால், இதில் பெருமைப்பட வேண்டிய விஷயம் மற்றொன்று உள்ளது. கடந்த ஆண்டு தான் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது.

இதன் மூலம் 116 ஆண்டுகால வரலாற்றில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த முதல் உறுப்பினராக வாட்டர்ஸ் திகழ்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு சமூக வளைதளத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இது குறித்து வாட்டர்ஸ் கூறுகையில்,‘‘நான் சாதாரணமாக தான் குழந்தைக்கு பால் கொடுத்தேன். ஆனால், இதன் மூலம் இளம் பெண்களுக்கு ஒரு தகவல் சென்றடைந்துள்ளது. நாடாளுமன்றவாதியாக இரு ந்துகொண்டே ஒரு தாயாகவும் செயல்பட முடியும் என்பதை எடுத்துக் காட்டியுள்ளேன். சமூக வளைதளங்களில் இந்த புகைப்படத்திற்கு கிடைத்த கருத்துக்கள் எனது நெஞ்சை தொடும் அளவில் இரு ந்தது’’ என்றார்.