சென்னை

காணொலியில் ஆஜராகும்படி கூறியதற்கு நித்தியானந்தா ஆஜராகதால் சென்னை உயர்நீதிமன்றம் வழ்க்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நித்தியானந்தாவை நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள வேதாரண்யம் ஸ்ரீ போ.கா.சாதுக்கள் மடம், ஸ்ரீ அருணாசல ஞானதேசிக சுவாமிகள் மடம், ஸ்ரீ பால்சாமி, சங்கரசாமி மடம், ஸ்ரீ சோமநாத சுவாமி கோவில் மடம் ஆகிய நான்கு மடங்களின் மடாதிபதியாகநியமித்து, மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தது தொடர்பாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பக்தர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், நான்கு மடங்களையும் நிர்வகிக்க, தக்கார் நியமித்து தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்தது. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள மடங்களுக்கு தக்கார் நியமன நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக் கோரி பெண் சீடருக்கு பொது அதிகாரம் வழங்கி நித்யானந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2017ல் தொடர்ந்த இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி,

”மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. வழக்கை தொடர உமாதேவி என்ற சீடருக்கு பவர் ஆப் அட்டார்னியை நித்யானந்தா கொடுத்துள்ளார்.  நீதிமன்றம் உண்மையிலேயே பொது அதிகார பத்திரத்தை நித்யானந்தா கொடுத்தாரா என நீதிமன்றம் அறிய விரும்புகிறது. ஆகவே, நித்யானந்தா நேரில் ஆஜராகி பொது அதிகார பத்திரத்தை கொடுத்தது உண்மைதான் என தெரிவிக்க வேண்டும். உமாதேவிக்கு வழங்கப்பட்டுள்ள பொது அதிகார பத்திரத்தின் மீது சந்தேகம் உள்ளதால், நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த வேண்டும். அவரை ஆஜராக சொல்ல வேண்டும்”

என வழக்கறிஞரிடம் கூறினார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நித்தியானந்தா இந்தியாவில் இல்லை எனவும் அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியும் அல்ல என்றதால் நீதிபதி, நித்யானந்தா எங்கு இருக்கிறார் என தெரிய வேண்டும். காணொளிக் காட்சி மூலம் அவரை ஆஜராக சொல்லலாம் என்று தெரிவித்தார். அதற்கு மனுதாரர் தரப்பில், அவர் ஆஜராக இயலாது என்று தெரிவிக்கப்பட்டது.  மடங்களை நிர்வகிக்க தக்கார் நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி நீதிபதி தண்டபாணி மனுவை தள்ளுபடி செய்தார் .