பாரத்பூர்

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 2 மருத்துவ மாணவர்கள் மற்றும் பி டெக் பட்டதாரி கைது செய்யப்பட்டுள்ளனர்

கடந்த மே 5-ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடந்தபோது பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது.  திருடிய வினாத்தாளுக்கு மருத்துவ மாணவர்கள் மூலம் விடை எழுத வைத்து, நீட் தேர்வர்களுக்கு விற்று பணம் சம்பாதித்ததாக தெரிய வந்தது.

இதுவரை இந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. 6 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ஏற்கனவே ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் நீட் தேர்வு வினாத்தாளை திருடியதாக பங்கஜ் குமார் என்ற என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவரது ஏற்பாட்டில், வினாக்களுக்கு பதில் குறித்துக்கொடுத்த ஒரு மருத்துவ மாணவியும், 4 மருத்துவ மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.

நேற்று மேலும் 2 மருத்துவ மாணவர்களை சி.பி.ஐ. கைது செய்தது. அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில்  2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வரும் குமார் மங்கலம் பிஷ்னோய், முதலாம் ஆண்டு மாணவர் தீபேந்தர் சர்மா ஆகியோர் ஆவர். கடந்த மே 5 ஆம் தேதி,இவர்கள் ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் இருந்து பங்கஜ் குமார் ஏற்பாட்டில், நீட் வினாக்களுக்கு பதில் குறித்து கொடுத்துள்ளனர்.,

இவ்வழக்கில், ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் படித்த பி.டெக். பட்டதாரி சசிகாந்த் பஸ்வான் என்பவரையும் சி.பி.ஐ. கைது செய்தது. இவரும் பங்கஜ் குமாருக்கு உடந்தையாக, மூளையாக செயல்பட்டுள்ளார். இதுவரை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.