சென்னை:  பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது  மேலும் மூன்று பேர்  காவல்துறை கைது செய்துள்ளது. ஏற்கனவே 24 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனால்,   கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை  சம்பவத்தை தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில், எந்தவித பேதமுமன்றி, பெரும்பாலான அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, போதைபொருள் விற்பனை, நிலம் ஆக்கிரமப்பு போன்ற சட்டவிரோத செயல்களை செய்து வந்தவர்கள்,  மேலும் பல வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக  இதுவரைஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி துணைத் தலைவர் ஹரிகரன், அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு துணைச் செயலாளர் மலர்கொடி, திமுக நிர்வாகி மகன் சதீஷ், வடசென்னை பாஜக நிர்வாகி அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், வழக்கறிஞர் சிவா, பிரதீப், முகிலன், நூர் விஜய், ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தமான், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி என 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த கொலை வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கோபி, குமரன் ஆகிய இருவரும் ஆந்திராவில் இருந்து நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்து ரவுடி ராஜேஷிடம் கொடுத்து தெரியவந்துள்ளது. ராஜேஷ் மீது இரண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையைத் தொடர்ந்து, கைது மேலும் அதிகரிக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய சம்போ செந்தில் உள்பட சிலர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்கவும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் உள்ளனர்.