சென்னை:  நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையு,  தலைமறைவாக உள்ள  பிரபல ரவுடி சீசிங் ராஜாவின் முக்கிய கூட்டாளி சஜித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அஸ்வத்தாமன், ரவுடி நாகேந்திரன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, ஆம்ஸ்ட்ராங் குறித்து தகவல் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் திருமலை உள்பட  மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கூலிப்படையை சேர்ந்த திருவேங்கடம் காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சம்போ செந்தில் மற்றும் அவரது கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே மொட்டை கிருஷ்ணாவுடன் தொடர்பு கொண்டதாக பிரபல இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் தேடப்பட்டு வந்த ரவுடி திருவேங்கடம் துபாயில் இருந்து ஆக. 23-ம் தேதி சென்னை வந்தபோது விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, குற்றவாளி சம்போ செந்திலின் முன்னாள் மனைவியிடம் விசாரணை நடத்திய போது, 2020-ம் ஆண்டு வரை சம்போ செந்தில் இவருடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் இருந்து சம்போ செந்திலின் தற்போதைய உருவம் குறித்த புகைப்படத்தை போலீசார் கைப்பற்றினர்.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சீசிங் ராஜாவின் கூட்டாளியான சஜித் தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சஜித் மீது ஏற்கனவே கொலை, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை தாம்பரம் காவல்துறையினர் இன்று மாலை சிறையில் அடைக்க உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஆட்டோ ஓட்டுநர் திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி!