
புதுடெல்லி: நாட்டின் மிகப் பழமையான போர்க் கப்பலான, ஐஎன்எஸ் விராட்டை உடைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது உச்ச நீதிமன்றம்.
ஐஎன்எஸ் விராட் கப்பல், பிரிட்டன் கடற்படையிலும், நம் கடற்படையில் 30 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணியாற்றியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டில், இந்தப் போர்க் கப்பலை இதற்குமேல் பயன்படுத்த முடியாது என்றும், அதை உடைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்தப் போர்க் கப்பலை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதற்காக நடந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இதையடுத்து, குஜராத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் நிறுவனம் ரூ.35.8 கோடிக்கு அதை வாங்கியது.
குஜராத்தின் அலாங்க் பகுதியில், அந்த கப்பலை உடைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த ‘என்விடெக்’ என்ற கப்பல் ஆலோசனை நிறுவனம், கப்பலை வாங்குவதற்கு தயாராக இருந்தது. இதுதொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், ஸ்ரீராம் நிறுவனம் தயாராக இருந்தும், ராணுவ அமைச்சகத்திடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.
இதையடுத்து, கப்பலை உடைப்பதற்கு தடை கோரி, அந்த நிறுவனமானது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள். ஏற்கனவே, கப்பலின் 40% உடைக்கப்பட்டு விட்டது. எனவே, இதற்கு மேலும், கப்பலை உடைப்பதற்கு தடை விதிக்க முடியாது” என்று குறிப்பிட்டது.