சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 2வது கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதன்மூல7ம் மேலும் 17 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேதல் வர இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், மக்களை கவரும் வகையில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தற்போது பெண்களை கவரும் வகையில் வழங்கி வரும் மகளிர் உரிமை தொகையில், விடுபட்ட மேலும் 17 லட்சம் பேர்பயன்பெறும் வகையில், மகளிர் உதவி தொகை விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. அதன்படி, இத்திட்டத்திற்காக கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 14-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் சுமார் 1.63 கோடி பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தகுதியின் அடிப்படையில் முதற்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரிலான இந்த திட்டத்தில் விடுப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு மேலும் சிலர் சேர்க்கப்பட்டனர்.
தமிழக அரசின் கணக்கீட்டின்படி, சுமார் 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்களுக்கு ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது, ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2022-23-ம் நிதியாண்டில் ரூ.7 ஆயிரத்து 926 கோடியே 35 லட்சமும், 2024-25-ம் நிதியாண்டில் ரூ.13 ஆயிரத்து 790 கோடியே 61 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் கடந்த நவம்பர் மாதம் வரை ரூ.9 ஆயிரத்து 121 கோடியே 49 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. ஆக மொத்தம் இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக ரூ.30 ஆயிரத்து 838 கோடியே 45 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அப்போது ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் மற்றும் கார் இருப்பவர் அதனை டாக்சி பயன்பாட்டிற்கு பயன்படுத்தினாலும் விண்ணப்பிக்கலாமென தெரிவிக்கப்பட்டது. இதையடுதது, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மொத்தம் 28 லட்சம் பெண்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்தனர். அதில் தற்போது 17 லட்சம் பெண்கள் தகுதியானவர்கள் என அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிர வழங்கும் நடைமுறையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனால் கலைஞர் உரிமைத்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.34 கோடி ஆகிறது.
புதிதாக தற்போது இந்த திட்டத்தில் இணைந்த பெண்களுக்கு வழக்கம் போல 15-ம் தேதி அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1,000 சேர்ந்துவிடும். தற்போது நிராகரிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கும் வகையில் மீண்டும் அவர்கள் விண்ணப்பம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது
[youtube-feed feed=1]