வாஷிங்டன்

ந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள மோதலில் அவசியம் இருந்தால் அமெரிக்க உதவத் தயாராக உள்ளதாக டிரமப் தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லைப் பகுதியால் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பகுதியில் சீனப்படைகள் இந்திய ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் தமிழக வீரரான பழனி உள்பட 20 பேர் உயிர் இழந்தனர்.   சுமார் 70க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.    அமெரிக்கா தொடர்ந்து சீனாவுக்கு எதிராகவும் இந்தியாவுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் கூறி வருகின்றன.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ சீனாவை ஒரு முரட்டு நடிகர் என வர்ணித்திருந்தார்.  இதைப்  போல் அமெரிக்க செனட்டர் ஒருவர் இந்தியாவில் நிலப்பகுதிகளைக் கைப்பற்றச் சீனா முயல்வதாக குற்றம் சாட்டி இருந்தார்.   சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான மோதலில் சீனத் தரப்பில் உயிரிழந்தோர் பற்றிய எந்த தகவலும் வராத நிலையில் அமெரிக்க உளவுத் துறை குறைந்த பட்சம் 35 சீன வீரர்கள் உயிர் இழந்திருக்கலாம் எனக் கூறி உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்துள்ளார்.  அதிபர் டிரம்ப் , “இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான நிலை குறித்து நான் அடிக்கடி இரு நாடுகளுடனும் பேசி வருகிறேன்.  இரு நாடுகளுக்கும் இடையில் பெரிய சிக்கல் உள்ளது.

இரு நாடுகளுமே பலத்த சேதங்களை சந்தித்துள்ளன.  இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நிலை குறித்து அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.   அவசியம் ஏற்பட்டால் அமெரிக்கா இந்த பிரச்சினையில் உதவத் தயாராக உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.