தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் உருவாகிறது அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’.

சுமார் நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். சுகுமார் இயக்குகிறார்.

இந்தப் படம் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டது. கொரோனாவால் தடைபட்ட இதன் ஷூட்டிங், மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 13 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனின் ஃபால்கான் கேரவன் விபத்தில் சிக்கி இருக்கிறது. ஆந்திர மாநிலம் ரம்பச்சோதவரம் காட்டுப் பகுதியில் இதன் ஷூட்டிங் சமீபத்தில் நடந்தது. ஷூட்டிங்கை முடித்துவிட்டு படக்குழு ஐதராபாத் திரும்பியது. நடிகர் அல்லு அர்ஜுனின் சொகுசு, ஃபால்கான் வேனிட்டி வேனும் திரும்பிக் கொண்டிருந்தது. வேனில், அல்லு அர்ஜுனின் மேக்கப் டீம் மற்றும் படக்குழுவினர் இருந்தனர்.

கம்மம் அருகே வந்தபோது, டிரைவர் பிரேக் பிடித்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று வேனிட்டி வேனில் மோதியது. இதில் யாருக்கும் காயம் இல்லை என்றாலும், வேன் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அந்த டிரைவர் கம்மம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து நடந்தபோது வேனில் அல்லு அர்ஜுன் இல்லை என்ற செய்தியை அறிந்த பிறகே ரசிகர்கள் நிம்மதியாகினர்.