நெய்வேலி

நேற்று நடந்த வன்முறை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 28 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1956ஆம் ஆண்டு முதல் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனம் ஆகும்.  நிறுவனத்தில் சுரங்கம்-1, சுரங்கம்-2, சுரங்கம்-1ஏ ஆகிய 3 திறந்தவெளி சுரங்கங்கள் உள்ளன. ராட்சத எந்திரங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, 4 அனல்மின் நிலையங்கள் மூலமாக ஒரு மணி நேரத்திற்கு 3,400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நிலக்கரி தட்டுப்பாட்டால் அடுத்த மாதம்(ஆகஸ்டு) முதல் 1000 மெகாவாட் மின் உற்பத்தியை நிறுத்தப்போவதாக என்.எல்.சி. அறிவித்துள்ளது.  கடந்த 26-ந்தேதி 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடி சோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் புதிய பரவனாறுக்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கியது.

அப்போது விளைநிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் 15-க்கும் மேற்பட்ட ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டு, பரவனாறுக்கு மாற்றுப்பாதை வெட்டும் பணி நடந்ததற்கு விவசாயிகள், பாமக உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

என்எல்சி நிலம் கையகப்படுத்துவதைக் கைவிடக்கோரி நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமையில் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. காவல்துறையினர் அன்புமணி ராமதாசை கைது செய்தபோது போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

காவல்துறையினர் வன்முறையை கட்டுப்படுத்த தடியடி நடத்தி கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி வன்முறையாளர்களை விரட்டியடித்தனர். இதனால் நெய்வேலி என்எல்சி நிறுவனம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டதாக 28 பேரை கைது செய்தனர்.

இன்று கைது செய்யப்பட்ட 28 பேரும் நீதிபதி முன் முன்னிறுத்தப்பட்டு 28 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, 28 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 28 பேரில் 2 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.