சென்னை:  சபாநாயகர் அப்பாவு மீதான அதிமுக அவதூறு வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார். அதிமுகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக சபாநாயகருக்கு எதிராக, அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காமல், கடந்த ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதையடுத்து,  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பாபு முருகவேலின் வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு சட்டப்படி நடவடிக்கையை தொடரும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் என்ற முறையில் பாபு முருகவேல் சாட்சிக் கூண்டில் ஏறி வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.