சென்னை

மீண்டும் சென்னையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

 

 

கடந்த சில நாட்களாக தக்காளி விலை ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்படுவதால் ஜூன் மாத இறுதியில் ஒரு கிலோ தக்காளி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.7 முதல் ரூ.15 வரை விற்பனை ஆனது.  எனவே வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் இம்மாத தொடக்கத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.50 வரையிலும், வெளி மார்க்கெட்டுகளில் ரூ.60 வரையிலும் விற்பனை ஆகி அதன்பிறகு, விலை சற்று குறையத் தொடங்கியது. குறிப்பாக கடந்த 17-ந் தேதி ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு கீழே வந்து விற்பனை செய்யப்பட்டது.

நேற்று முன்தினத்தில் இருந்து மீண்டும் விலை ஏறுமுகத்தை நோக்கி சென்று நேற்று முன்தினம் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்ததுடன் நேற்றும் கிலோவுக்கு ரூ.10 அதிகரித்திருந்தது. கடந்த 2 நாட்களில் மட்டும் தக்காளி கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலேயே அதிகரித்து வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ரூ.40 முதல் ரூ.60 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு அதிகளவில் தக்காளி வரத்து இருக்கிறது. அங்கு சமீப நாட்களாக தென்மேற்கு பருவமழையால் அதிக மழை பதிவாகி வருகிறது. எனவே தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, அதன் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.