சென்னை: கரூர் கூட்ட நெரிசல், அதனால் ஏற்பட்ட பலிக்கு நிர்வாக அலட்சியமே காரணம் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது.
அரசு அதிகாரிகளே கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காரணம் என்றும், கரூர் மாவட்ட நிர்வாகம் முறையாக விளக்கம் அளிக்கவில்லை என பா.ஜ.க குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தவெகவினர், அதிமுகவினர், பாஜகவினர் திமுக அரசை குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு திமுக அரசு மறுப்புதெரிவித்து வருவதுடன், திமுக கூட்டணி கட்சியினர் தவெகமீது கடுமையாக சாடி வருகின்றனர்.
இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். மேலும் இந்த நிகழ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களையும் அரசு கைதுரு செய்து வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மறுபுறம் கரூர் விவகாரம் குறித்து விசாரிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஹேம மாலினி தலைமையில் 8 எம்பிக்கள் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது. இந்த குழுவினர் கரூர் வருகை தந்து அங்குள்ள மக்களிடம் விசாரணை நடத்தியதுடன், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தும் பேசினர். இதையடுத்து, இந்த குழு அறிக்கை தயாரித்து, அதை கட்சி தலைமையிடம் சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில், விஜய் நடத்திய கரூர் பிரசார கூட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட நிர்வாக அலட்சியமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் விஜய் பரப்புரை மேற்கொள்ளக் காவல் துறை வழங்கிய இடத்தில் 3000 பேர் மட்டுமே இருக்கக்கூடிய வகையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 27ஆம் தேதி விஜய் பரப்புரையின் போது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குறுகிய இடத்தில் ஒன்று கூடியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் காவல்துறை தரப்பிலிருந்து எந்த ஓர் ஏற்பாடும் செய்யப்படவில்லை என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பிரசாரத்துக்கு ஒதுக்கப்பட்ட வேலுச்சாமி மரத்தில் காலை 9 மணியிலிருந்து விஜய பார்க்கக் கூட்டம் வரத் தொடங்கியுள்ளது மூன்று மணிக்கு விஜய் பேசுவார் என்று கூறப்பட்டிருந்த நிலையில், 7 மணிக்கு விஜய் பரப்புரை நிகழ்வு இடத்திற்கு வருகை தந்தார்.
குறிப்பாகப் பரப்புரையின் போது விஜய் பேசத் தொடங்கிய பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அங்குக் கூடியிருந்தவர்கள் அச்சமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பலமுறை நடைபெற்ற இடத்தில் கழிவு நீர்க் கால்வாய் இருந்துள்ளது அதில் சிலர் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும் பரப்புரை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியவர்களும், அதனை நிர்வகித்த அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹேம மாலினி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
மேலும் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்திற்கு ஆய்விற்குச் சென்றபோது தங்களுடைய குழுவை கரூர் மாவட்ட ஆட்சியர் சந்திக்க மறுத்ததாகக் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து நிர்வாகத்தின் வெளிப்படத் தன்மை குறித்த கேள்விகளும் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பாஜக தலைமையின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.