சென்னை: சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2 ஆயிரம் கோடி கடன் ( $240 Million Loan )வழங்கி உள்ளது.
சென்னையில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக அல்லல்பட்டு வந்த மக்களிடையே மெட்ரோ ரயில் சேவை பெரும், வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக மெட்ரோ ரயில் சேவை புறநகர் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் ஏற்கனவே முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவையை தொடர்ந்து, தற்போது 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாதவரம் – சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4வது வழித்தடத்திலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெறுகின்றன. இதில், சுமார் 42.6 கி.மீ. சுரங்கப்பாதையில் 43 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தும் பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி ஆசிய வளர்ச்சி மொத்தம் 780 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்க ஒப்புதல் அளித்திருந்தது. கடந்த 2022ம் ஆண்டில் முதல் கட்டமாக 350 மில்லியன் டாலர் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 2வது கட்ட நிதியாக ஆசிய வளர்ச்சி வங்கி 240 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.2,000 கோடி) கடன் உதவி அளித்துள்ளது.
இந்த 2ம் கட்ட நிதி மூலம் 3, 4 மற்றும் 5 ஆகிய 3 மெட்ரோ பாதைகளின் முக்கிய பகுதிகளில் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் அமைக்கப்படும். இதில் மேம்பாலம் மற்றும் நிலத்தடி பாதைகள் இரண்டும் அடங்கும். 18 புதிய மெட்ரோ நிலையங்கள் கட்டப்படும். இந்த நிலையங்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையிலும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வலிமையுடனும் வடிவமைக்கப்படவுள்ளது. பாதை 3 சோழிங்கநல்லூர் – சிப்காட்-2 பகுதி (மேம்பாலம்), பாதை 4 கலங்கரை விளக்கம் – கோடம்பாக்கம் பகுதி (நிலத்தடி), பாதை 5 மின்சாரம், இழுவை அமைப்பு மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கூடுதல் வசதிகளாக மெட்ரோ, பேருந்து போன்ற பல்வேறு போக்குவரத்து சாதனங்களுக்கு இடையே எளிதாக மாறுவதற்கான இடைமாற்று மையங்கள் மேம்படுத்தப்படவுள்ளது. பெண்கள் மற்றும் முதியவர்கள் பயணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளது
. டிக்கெட் வருவாய் அல்லாத பிற வருவாய் ஆதாரங்களை வலுப்படுத்தி மெட்ரோவின் நீண்டகால நிதி நிலைமையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த 2ம் கட்ட கட்டுமானப் பணிகள் 2028ம் ஆண்டு நடுப்பகுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]