சென்னை

ஜெய்பீம் படம் குறித்து நடிகர் சூர்யாவைச் சாடிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு சூர்யா பதில் அளித்துள்ளார்.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் தற்போது ஓடிடி யில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.  இந்த படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் மற்றும் தனி நபரைக் தாக்கி காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவரும் மாநிலங்களை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதற்கு நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள பதிலில்,

”மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு,

வணக்கம்.  தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன்.  என் மீதும் எனது குடும்பத்தினர் மீதும்  தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி.

 

 

 

நீதி நாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது நடத்திய ஒரு வழக்கில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலை நாட்டப்பட்டது என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு.  பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைஅக்ளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம்.

கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல் எந்த ஒரு தனி நபரையோ சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒரு போதும் எனக்கோ படக்குழுவினருக்கோ இல்லை.   சிலர் சுட்டிக் காட்டிய பிழையும் உடனடியாக திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.

‘படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவு படுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை என்னும் தங்கள் கருத்தை முழுவதுமாக ஏற்கிறேன்.  அதைப் போல் படைப்பு சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் வராமல் காக்க வேண்டும் என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல.  ’இத்திரைப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டுள்ளது.  இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்கிற அறிவிப்பைப் படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம்.

எளிய மக்கள் நலன்மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும் அவர்கள் ஒரே மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள்.  அதில் சாதி, மத, மொழி, இன பேதம் இல்லை. உலகம் முழுவதும் இதற்குச் சான்றுகள் உண்டு. படத்தின் மூலம் அதிகாரத்தை எழுப்பிய கேள்வியைக் குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்த கதாபாத்திரத்தின் பெயர் வேறொருவரையும் குறிப்பிடுவதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார்.  எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாகக் குறிப்பிடப்படுவதாகக் கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை.  அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல் பெயர் அரசியலால் மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது.

சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன்.  நாடு முழுவதும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும் பேராதரவும் எனக்கு இருக்கிறது.  விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ தேவையோ எனக்கு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்.  சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம், தங்கள் புரிதலுக்கு நன்றி”

எனத் தெரிவித்துள்ளார்.