பெங்களூரு

கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள நடிகர் தர்ஷன் சொகுசாக உள்ள புகைப்படம் வெளியானதால் அவர் வேறு சிறைக்கு மாற்றப்பட உள்ளார்.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகர் ரேணுகாசாமியை  கொலை செய்த வழக்கில், தர்ஷன் மற்றும் அவரது தோழி நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றக் காவலில் உள்ள நடிகர் தர்ஷன் சிறை வளாகத்தில் திறந்த வெளியில் நாற்காலியில் அமர்ந்தபடி கையில் சிகரெட்டை பிடித்தபடி தேநீர் பருகுவது போன்ற புகைப்படம் வெளியானது.

நடிகர் தர்ஷனுக்கு அருகே ரௌடி வில்சன் கார்டன் நாகா மற்றும் தர்ஷனுடைய மேலாளாராக பணிபுரிந்த நாகராஜ் ஆகியோர் அமர்ந்து கொண்டு அரட்டையடிக்கும் காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இது குறித்து ரேணுகாசாமியின் தந்தை காஷிநாத் எஸ். ஷிவானாகௌத்ரு,

 “ரேணுகாசாமி கொலை வழக்கில் காவல்துறை மீது நம்பிக்கை இருந்தது. ஆனால், இந்த புகைப்படத்தை கண்டபின், சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக முழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்”

என்று தெரிவித்துள்ளார்

கன்னட நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்ட விவகாரத்தில் 7 சிறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடைநீக்கம் குறித்து கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, சிறைத் துறை தலைமை இயக்குனரிடம் பேசியதாகவும், விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.

நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவரை வேறு சிறைக்கு மாற்ற முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தி முழு அறிக்கை அளிக்கவும் மாநில டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.