ராமருக்கும், அயோத்திக்கும் சொந்தம் கொண்டாடும் நேபாள பிரதமர்

கொரோனா பரவலைத் தடுக்க உருப்படியான நடவடிக்கை எடுக்காததால் நேபாள நாட்டுப் பிரதமர் கே.பி.சர்மா ஒளி மீது ,ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினரே கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதனால் ,மக்களைத் திசை திருப்பும் வகையில், இந்தியாவுக்குச் சொந்தமான லிபுலே, காலாபாணி உள்ளிட்ட பகுதிகள் நேபாளத்துக்குச் சொந்தமானவை என்று உரிமை கொண்டாடிய ஒளி, அந்த இடங்களைத் தனது நாட்டுடன் இணைத்து புதிய வரை படத்தை ஜோடித்து வெளியிட்டுள்ளார்.

இதற்கும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், ஒளியின் பிரதமர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் காட்மண்டுவில் உள்ள தனது வீட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒளி,’’ ராமபிரான் இந்தியாவைச் சேர்ந்தவர் அல்ல-அவர் நேபாள நாட்டுக்குச் சொந்தக்காரர்’’ என்று புதிய வெடிகுண்டை வெடித்துள்ளார்.

‘’ ராமர் பிறந்த அயோத்தி, இப்போது இந்தியாவில் உள்ள அயோத்தி அல்ல. ராமர் பிறந்த உண்மையான அயோத்தி, நேபாள நாட்டின் பிர்குஞ்ச் பகுதியில் உள்ள சின்ன கிராமத்தில் உள்ளது.’’ என்று கூட்டத்தினரைக் கிறுகிறுக்க வைத்த பிரதமர் ஒளி,’’ கலாச்சார ரீதியாக நாம் ஒடுக்கப்படுகிறோம். உண்மைகள் மறைக்கப்படுகின்றன’’ என்று  புலம்பியுள்ளார்.

-பா.பாரதி