துபாய்: ஐசிசி வெளியிட்ட சர்வதேச டி-20 பேட்ஸ்மென்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்தியாவின் லோகேஷ் ராகுலுக்கு 2வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக, லிமிடட் ஓவர் கிரிக்கெட்டில், இந்திய அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவரும் ராகுல், நடந்துமுடிந்த நியூசிலாந்திற்கு எதிரான டி.0 தொடரில் பிரமாதமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்றார். அத்தொடரில் அதிக ரன்களை அடித்தவர் அவரே.

ஐசிசி தரவரிசைப் பட்டியலில், 823 புள்ளிகளைப் பெற்று 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் ராகுல். முதலிடத்தில், பாகிஸ்தான் அணியின் பாபர் ஆஸம் 879 புள்ளிகளுடன் நீடிக்கிறார்.

ரோகித் ஷர்மா 662 புள்ளிகளுடன் 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராத் கோலிக்கு 673 புள்ளிகளுடன் 9வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

பந்து வீச்சாளர்கள் பட்டியலில், 630 புள்ளிகள் பெற்ற பும்ரா, 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் இருக்கும் பந்துவீச்சாளர் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான். பெற்ற புள்ளிகள் 749.