ஸ்டாக்ஹோம்:
இந்த ஆண்டு (2019) இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. கனடா மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த 3 பேருக்கு இந்த பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது.
சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
கனடாவைச் சேர்ந்த ஜேம்ஸ் பீபிள்ஸ், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த டிடியர் குவலாஸ், மற்றும் மைக்கேல் மேயர் ஆகிய மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில், ஜேம்ஸ் பீபிள்ஸ் என்ற ஆராய்ச்சியாளர், அண்டவியல் தொடர்பாக 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.
பிரபஞ்சம் தொடர்பான கோட்பாடு குறித்து 20 ஆண்டுகளுக்கு மேல் அவர் ஆராய்ச்சி செய்ததாக வும், அது தான், பெருவெடிப்பு முதல், தற்காலம் வரையிலான பிரபஞ்ச வரலாற்றின் நவீன புரிதலின் அடித்தளமாக உள்ளதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. இதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
அதுபோல, சுவிட்சர்லாந்தைச் டிடியர் குவலாஸ், மற்றும் மைக்கேல் மேயர் ஆகியோர், 1995ஆம் ஆண்டில் சூரியக் குடும்பத்திற்கு வெளியே 51 பெகசி (51 pegasi) என்ற கோளைக் கண்டுபிடித்தனர். சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை அது சுற்றி வருவதையும் அவர்கள் கண்டறிந்தனர். இதற்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.