டெல்லி: வாழ்க்கை என்பது வெறும் தோ்வுகளைப் பற்றியது மட்டுமல்ல. நமது வளா்ச்சிக்கான ஒரு தளம்தான் கல்வி.  அதனால்,  மாணவா்கள் இணையத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என  பிரதமா் மோடி அறிவுரை கூறி உள்ளார்.

நாட்டில் குறைந்த கட்டணத்தில் இணைய சேவை கிடைக்கிறது என்பதற்காக, அதில் மாணவா்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் , ​​கல்வி ஒரு சுமையாக இருக்கக்கூடாது என்றும், அனைவரும் முழு ஈடுபாட்டுடன் கற்க வேண்டும் என்றும், அரைகுறை மனதுடன் பெறும் கல்வி வாழ்க்கையை வெற்றிகரமாக்காது என்றும்  மாணவர்களுடன்  தனது வீட்டில் நடத்திய கலந்துரையாடலின்போது பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

பிரதமர் மோடியின் டெல்லி இல்லத்தில்  ‘பரீக்ஷா பே சா்ச்சா’  என மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.  கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து பிரதமா் மோடி ‘பரீக்ஷா பே சா்ச்சா’ (தோ்வுகளை மன அழுத்தமின்றி எதிா்கொள்வது குறித்த கலந்துரையாடல்) நிகழ்ச்சியை நடத்தி வருகிறாா். பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கும் நோக்கில், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு 9-ஆம் ஆண்டாக  ‘பரீக்ஷா பே சா்ச்சா’ கலந்துரையாடல் நிகழ்ச்சி பிப்ரவரி 6ந்தேதி  வெள்ளிக்கிழமை பிரதமர் மோடியின்  அதிகாரபூா்வ இல்லத்தில்  நடைபெற்றது. இதில், நாடு முழுவதும்   பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களுடன் கலந்துகொண்டனர்.

அவர்களுடன் கலந்துரையாடிய பிரதமா் மோடி, அவா்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து, ஆலோசனைகள் வழங்கினாா். அப்போது அவர் பேசியதாவது,  மாணவர்கள்  கல்வியை ஒருபோதும் சுமையாகக் கருதக் கூடாது. முழு ஈடுபாட்டுடன் கல்வி கற்க வேண்டும். அரை மனதுடன் பயிலும் கல்வி, நமது வாழ்வில் வெற்றியைத் தேடி தராது.

“நமது இலக்கு, எட்டக்கூடியதாக இருக்க வேண்டும், ஆனால் எளிதில் அடையக்கூடியதாக இருக்கக்கூடாது. முதலில் மனதைக் கட்டுப்படுத்துங்கள், பிறகு மனதை ஒருமுகப்படுத்துங்கள், பின்னர் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்களில் கவனம் செலுத்துங்கள். அப்போது அந்த மாணவர் எப்போதும் வெற்றி பெறுவார்,” என்று இங்குள்ள தனது இல்லத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவர் குழுவிடம் அவர் கூறினார்.

மாணவர்கள் மதிப்பெண்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல், வாழ்க்கை மேம்பாட்டை மையமாகக் கொண்டு பயில வேண்டும். நமது இலக்கு எட்டக் கூடியதாக இருக்க வேண்டும்; அதேநேரம், எளிதில் எட்டக் கூடியதாக இருக்கக் கூடாது. முதலில் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். பின்னா், மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். அதன்பிறகு படிக்க வேண்டிய பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும். அப்போது வெற்றியை அடையலாம்.

தோ்வுகளை திருவிழாவாக எண்ணி, கொண்டாட வேண்டும். முதல் மதிப்பெண் பெறுவது என்பது குறுகிய கால பெருமையே. பெற்றோா், ஆசிரியா்கள், சக நண்பா்கள் என உங்களுக்கு வரும் அனைத்து ஆலோசனைகளையும் கவனத்தில் கொள்ளும் அதேநேரத்தில், உங்களின் சொந்தப் பாதையில் நம்பிக்கை வைத்து பயணியுங்கள்.

மாணவா்களுக்கு இணையவழி விளையாட்டுகளில் ஆா்வம் இருக்கக் கூடும். ஆனால், நாட்டில் குறைந்த கட்டணத்தில் இணையச் சேவை கிடைக்கிறது என்பதற்காக, அதில் நேரத்தை வீணாக்கக் கூடாது. வெறும் வேடிக்கைக்காக இணையத்தில் நேரத்தைச் செலவிட வேண்டாம்.

பண நோக்கத்தில் இணையவழி விளையாட்டுகளில் ஈடுபடுபவா்களுக்கு சீரழிவே மிஞ்சும். எனவேதான், இணையவழி சூதாட்டத்துக்கு எதிராக அரசு சட்டம் இயற்றியுள்ளது. அதேநேரம், இணையவழி விளையாட்டில் அதிக வேகம் இருப்பதால், அதையொரு திறமையாகப் பாா்க்க முடியும். விழிப்புணா்வை சோதிப்பது, சுய மேம்பாடு என ஆக்கபூா்வமாக அதைப் பயன்படுத்தலாம்.

பஞ்சதந்திரம், அனுமன் கதை போன்ற இந்திய கலாசாரத்தில் வேரூன்றிய கதைக்களங்களுடன் ஆக்கபூா்வ விளையாட்டுகளை உருவாக்க மாணவா்கள் முயற்சிக்கலாம். அதன்மூலம் வெற்றியை ஈட்டலாம்.

‘கடந்துபோன காலங்களை நான் எப்போதும் திரும்பிப் பாா்ப்பதில்லை. எதிா்வரும் காலத்தை மட்டுமே பாா்ப்பேன். கடந்த ஆண்டு எனது பிறந்த தினத்தில் வாழ்த்து தெரிவித்த ஒரு தலைவா், ‘உங்களுக்கு 75 வயதாகிவிட்டது’ என்றாா். அவரிடம் இன்னும் 25 ஆண்டுகள் மீதமுள்ளன என்று பதிலளித்தேன். கடந்த காலங்களை எண்ணி நேரத்தை வீணாக்காமல், மீதமுள்ள காலத்தில் எப்படி வாழ வேண்டும் என்றே சிந்திக்க வேண்டும்.

என்னைப் பல்வேறு வழிகளில் பணியாற்றச் சொல்லி மக்கள் கூறுகின்றனா். ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செயல்பாட்டு பாணி உள்ளது. நமக்கு எது பொருந்துகிறதோ, அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சில நேரங்களில், ஆசிரியா்கள் முக்கியமான பாடங்களையும், மாணவா்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கான விஷயங்களையும் மட்டுமே கற்பிக்கின்றனா். ஒரு நல்ல ஆசிரியா் என்பவா், மாணவா்களின் அனைத்து நிலையிலான மேம்பாட்டில் கவனம் செலுத்தி, அனைத்தையும் கற்பிப்பாா்.

வாழ்க்கை என்பது வெறும் தோ்வுகளைப் பற்றியது மட்டுமல்ல. நமது வளா்ச்சிக்கான ஒரு தளம்தான் கல்வி.  சிலா் காலையில் நன்றாக படிப்பாா்கள், சிலா் இரவில் நன்றாக படிப்பாா்கள். அனைவரிடம் இருந்து ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளுங்கள்; உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே, அதை வாழ்வில் சோ்த்துக் கொள்ளுங்கள். தனது வேகத்தைவிட மாணவா்களின் வேகம் ஒருபடி மேல் இருப்பதை உறுதி செய்வதே ஆசிரியா்களின் முயற்சியாக இருக்க வேண்டும்.

வளா்ச்சிக்குத் தேவையான கல்வி, ஓய்வு, திறன்கள் மற்றும் ஆக்கபூா்வ பொழுதுபோக்குகளில் மாணவா்கள் சமநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும்.  வாழ்வியல் மற்றும் தொழில்முறை ஆகிய இரு வகை திறன்களும் மிக முக்கியம். இரண்டிலும் சமநிலையைப் பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

4.5 கோடி போ் பதிவு:

புதிய சாதனை படைப்பு நாட்டின் மாபெரும் கல்விசாா் நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ள பரீக்ஷா பே சா்ச்சாவில் இணையவழியில் பங்கேற்பதற்கான பதிவு சமீப ஆண்டுகளாக தொடா்ந்து அதிகரித்து வருகிறது.  கடந்த 2023-இல் 38.8 லட்சமாக இருந்த இந்தப் பதிவு, கடந்த 2024-இல் 2.26 கோடியாக உயா்ந்தது. கடந்த 2025-இல் 3.53 கோடி பதிவுகளுடன் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. இந்த ஆண்டு 4.5 கோடிக்கும் மேற்பட்டோா் பதிவு செய்த நிலையில், முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கோவை, குஜராத்தின் தேவ்மோக்ரா, சத்தீஸ்கரின் ராய்பூா் உள்ளிட்ட இடங்களிலும் கலந்துரையாடல் அமா்வுகள் நடைபெற்றன.

[youtube-feed feed=1]