ஸ்ரீலங்கா: இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்,  அந்நாட்டையே முடக்கி போட்டுள்ளது. நாடு முழுவதும் பஸ், ரயில், விமான சேவைகள் முடங்கிய நிலையில் நிலச்சரிவு உள்பட பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதைடுத்து, இலங்கைக்கு உதவ  இந்தியா 2 போர்க்கப்பல்களை அனுப்பி நிவாரண பணிகளை மேற்கொள்வதுடன், அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட் களையும் அனுப்பி உதவி  செய்து வருகிறது.

 டிட்வாவின் கோர தாண்டவத்தால் இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்ககையிலும் பரவலாக மழை  பெய்து வருகிறது இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, வலுப்பெற்று  டிட்வா புயலாக மாறி, இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து டிட்வா புயல் தமிழ்நாடுநோக்கி 7 கி.மீ வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது.

டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த வாரம் முதலே கனமழை பெய்து வந்த நிலையில், அங்கு  பேரழிவை  ஏற்படுத்தி உள்ளது.  இலங்கையின் கிழக்கு மாவட்டமான திருகோணமலை உள்பட   பல மாகாணங்களில் 200 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. கிழக்கு திருகோணமலை, பதுளை மற்றும் தெற்கு மாகாணத்தில் மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் 150 மி.மீ வரை மழை பெய்துள்ளது. 80 முதல் 90 கிமீ வரை காற்றுடன் பலத்தமழை பெய்ததால், பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மேலும் கடுமையான சூறாவளி வீசி வருவதால், கடந்த சில நாட்களக்கு இலங்கைக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.  இந்தியாவின் கொச்சி மற்றும் திருவனந்த புரம் மற்றும் தெற்கு மாகாணத்தில் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய மாகாண நகரமான கம்போலாவில், ரயில் நிலையம் முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளது, பல பெட்டிகள் நீரில் சிக்கியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால், நாடே முடங்கிபோய் உள்ளது.

புயல் மழையால்,  மலையகப் பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்கள் வெள்ளக்காடாக மாறியதுடன், தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுப் பெரும் சேதத்தை விளைவித்துள்ளன. சாலை மற்றும் ரயில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக  ஏற்பட்ட சூறாவளி மற்றும்  தொடர் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேரைக் காணவில்லை. சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 44,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால்,  வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே இலங்கையின் வெள்ள மீட்புப் பணிகளில் இந்திய விமானம் தாங்கிக் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஈடுபடுத்தப்படும் என்று மத்தியஅரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இலங்கைக்கு நிவாரண உதவிகள் வழங்க வசதியாக ஆபரேஷன் சாகர் பந்து தொடங்கப்பட்டதாக ஒன்றிய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அறிவித்தார். இதற்காக ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி ஆகியவை கொழும்பில் நிவாரணப் பொருட்களை ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி இரங்கல்

இலங்கையில் புயலால் பாதிக்கப்பட்டு பலியான மக்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில்,’ டிட்வா புயலால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான மீட்சிக்காக நான் பிரார்த்திக்கிறேன். எங்கள் நெருங்கிய கடல்சார் அண்டை நாடான இந்தியாவுடன் ஒற்றுமையுடன், ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்துள்ளோம். நிலைமை சீரடையும்போது மேலும் உதவி வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக கடுந்துயரத்துக்கு உள்ளாகியிருக்கும் இலங்கைக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை இந்திய விமானப் படை விமானம் இன்று காலை கொண்டு சேர்த்துள்ளது. சி130 ரக விமானம், மக்களுக்குத் தேவையான அடிப்படை உணவு உள்ளிட்ட பொருள்கள், கொழும்புவின் பண்டரநாயக்கே சர்வதேச விமான நிலையத்துக்கு அதிகாலை 1.30 மணிக்குக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படை அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள், நிவாரணப் பொருள்களைப் பெற்றுக் கொண்டனர். தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, இலங்கையில் கனமழை பெய்து, அதனால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு இதுவரை 69 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வந்த 34 பேரின் கதி என்ன என்று இதுவரை தெரியவரவில்லை. இந்த பேரிடரில், 61 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக பல இடங்கள் தொடர்புகொள்ள முடியாத வகையில் துண்டிக்கப்பட்டுள்ளன. கண்டி பகுதியில் மட்டும், மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.