உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக இந்தோனேசியாவின் ஜகார்த்தா உருவெடுத்துள்ளது.

ஜப்பானின் டோக்கியோ முதலிடத்தில் இருந்துவந்த நிலையில், நகரமயமாக்கல் மற்றும் பெருநகர வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை புதிய அளவுகோல்களைப் பயன்படுத்தி தரவரிசையை மாற்றியுள்ளது.

இதன்படி 33வது இடத்தில் இருந்த ஜகார்த்தா முதல் இடம் பிடித்துள்ளது, முதலிடத்தில் இருந்த டோக்கியோ மூன்றாம் இடத்திற்கும் இரண்டாம் இடத்தில் பங்களாதேஷின் டாக்காவும் இடம்பெற்றுள்ளது.

ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறை இந்த மாதம் வெளியிட்டுள்ள உலக நகரமயமாக்கல் வாய்ப்புகள் 2025 அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தரவரிசையில் முதல் 10 நகரங்களில் ஜகார்த்தா, டாக்கா, டோக்கியோ, புது தில்லி, ஷாங்காய், குவாங்சோ, மணிலா, கொல்கத்தா மற்றும் சியோல் ஆகிய 9 ஆசிய நகரங்கள் இடம்பெற்றுள்ளது ஏழாவது இடத்தில் எகிப்தின் கெய்ரோ இடம்பிடித்துள்ளது.

இந்தியாவின் புதுடெல்லி 30 மில்லியன் மக்கள்தொகையுடன் 4வது இடத்திலும், 22 மில்லியனுடன் 9வது இடத்தில் கொல்கத்தாவும் இடம்பிடித்துள்ளது.

இதில், 20 மில்லியன் மக்கள்தொகையுடன் மும்பை 12வது இடத்திலும், 13 மில்லியனுடன் பெங்களூரு 24வது இடத்திலும் 11 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சென்னை 29வது இடத்திலும் உள்ளது.

இந்தோனேசிய தலைநகரம் ஜகார்த்தா 42 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளது என்றும் டாக்கா 36 மில்லியன் மற்றும் டோக்கியோ 33 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

உலகின் 8.2 பில்லியன் மக்களில் 45 சதவீதம் பேர் பெருநகரங்களிலும், 36 சதவீதம் பேர் நகரங்களிலும், மீதமுள்ள 19 சதவீதம் பேர் கிராமப்புறங்களிலும் வசித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, 2050 ஆம் ஆண்டளவில் உலக மக்கள்தொகையின் மூன்றில் இரண்டு பங்கை பெருநகரங்கள் கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.