சென்னை: நாளை மற்றும் நாளை மறுதினமான (ஆகஸ் 28, 29ம் தேதிகள்) சுபமுகூர்த்தநாள் என்பதால், அன்று ஏராளமான பத்திரபதிவுகள் நடைபெறும் வகையில், கூடுதல் முன்பதிவு வில்லைகள் (டோக்கன்கள்) வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது.
சுபமுகூர்த்த தினங்களான நாளை மற்றும் 29ம் தேதி கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பதிவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான நாளை மற்றும் 29ம் தேதி அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான நாளை மற்றும் 29ம் தேதி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.