சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் இன்று பிற்பகல் தமிழ்நாடு வருகை தருகிறார். நெல்லையில் நடைபெற உள்ள பாஜக கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவர் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையொட்டி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கிறது. மீண்டும் ஆட்சி அமைக்க தி.மு.க. அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்டவை தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். களத்தில் சென்று மக்களை சந்திப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.  அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க.வும் கடந்த முறையை விட, இந்த முறை அதிக இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க. அதிக இடங்களில் போட்டியிடவும், அ.தி.மு.க. கூட்டணியை அதிக இடங்களில் வெற்றி அடைய செய்ய வேண்டும் என்பதற்காகவும் உள்துறை மந்திரி அமித்ஷா புதிய வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக இன்று  நெல்லையில் அமித் ஷா தலைமையில் பாஜக மண்டல மாநாடு நடைபெறுகிறது.  இதில் கலந்துகொள்ள  இன்று பிற்பகல் விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்தது அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை வருகை தருகிறார். இன்று நடைபெறும் பாஜக கூடட்டத்தில் சுமார்  1 லட்சம் பேர் பங்கேற் பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவின் முதல் மண்டல மாநாடு நெல்லையை தலைமையிடமாக கொண்டு நெல்லையை தலைமையிடமாக கொண்டு   இன்று (ஆகஸ்டு 22-ந்தேதி)  நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் அமித்ஷா, இன்று காலை  கேரள மாநிலம் கொச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மதியம் 2.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம், நெல்லை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். அங்கு தேநீர் விருந்தில் பங்கேற்றுவிட்டு மீண்டும் கார் மூலம் சாலை மார்க்கமாக வண்ணார்பேட்டை, வடக்கு புறவழிசாலை வழியாக விழா மேடைக்கு 4.20 மணிக்கு வருகிறார்.

இந்த மாநாட்டில் அமித்ஷா சுமார் ஒருமணி நேரம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு எவ்வளவு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதனால் மக்கள் அடைந்துள்ள பயன்கள் பற்றியும் விரிவாக பேச  இருப்பதாக பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.  மேலும், கூட்டணி கட்சியுடன் இணைந்து தேர்தலில் வெற்றி அடைவதற்கு மேற்கொள்ளப்பட உள்ள பணிகள், அதிக இடங்களில், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது எப்படி?, சட்டசபை தேர்தல் வியூகம் ஆகியவை குறித்து நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த  இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 இந்த மாநாட்டில் நெல்லை மண்டலத்தில் உள்ளடக்கிய நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பாரதிய ஜனதா நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். நெல்லை மண்டலத்தில் மொத்தம் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் என சுமார் 1 லட்சம் பேர் இந்த மாநாட்டில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்வாகிகள் பகல் 12 மணி முதல் 3 மணிக்குள் மாநாட்டு பந்தலில் வந்து சேர்ந்து விட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.. இறுதியாகக் கூட்டம் முடிந்தவுடன் ஏற்பாடு செய்யப்படும் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு ஊர்களுக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா சார்பில் நடத்தப்படும் இந்த முதல் மாநாட்டில் அமித்ஷா பங்கேற்க உள்ளதால் தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த மாநாட்டில் அமித்ஷாவுடன், தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு) சந்தோஷ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மாநாட்டையொட்டி, போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில், தங்களை விளம்பர பதாதைகள் வைக்க காவல்துறை அனுமதி மறுத்து வருவதாகவும், பல்வேறு கெடுபிடிகளை செய்வதாகவும் பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.