சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் சார்மினார் எக்ஸ்பிரஸ் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இயங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் 734.91 கோடி ரூபாயில் சீரமைக்கும் பணி கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 2023 பிப்ரவரியில் பணிகள் தொடங்கிய நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் விரிவாக்க பணிகள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவாக்க பணிகளின்போது, எழும்பூர் காந்தி இர்வின் சாலை பக்கத்தில், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க அடித்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதுட, பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில் வாகன நிறுத்துமிடம், பார்சல் அலுவலகத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. அத்துடன், ரயில் நிலையத்தின் உட்பகுதிகளில் புதிய நடைமேம்பாலம் அமைப்பது, நடைமேடைகளில் பயணியருக்கான அடிப்படை வசதிகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் எழும்பூர் ரயில் நியைத்தில் இருந்து புறப்பட்டு 10க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்து, தாம்பரம், கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து தற்காலிகமாக இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், எழும்பூரிலிருந்து இயக்கப்பட்டு வந்த 6 விரைவு ரயில்கள் தாம்பரத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதனால், சார்மினார் விரைவு ரயில், கடற்கரை ரயில் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஆக.18-ம் தேதி வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும் என்று ஏற்கவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த ரயில் இந்த ஆண்டு டிசம்பர் இறுதி வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சார்மினார் விரைவு ரயில் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.20 மணிக்கும் புறப்படும். ஐதராபாத்தில் இருந்து புறப்படும் சார்மினார் விரைவு ரயில் சென்னை கடற்கரைக்கு காலை 7.15 மணிக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.