திருமலை
இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்ததால் பக்தர்கள் தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருந்துள்ளனர்.

நாளை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம் நாளை நடைபெற உள்ளதால் இன்று அதிகாலை சுப்ரபாதம் மற்றும் நித்ய பூஜைகளுக்கு பிறகு காலை 6 மணி முதல் 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் (கோயிலை சுத்தம் செய்யும் பணி) நடந்தது. எனவே 6 மணி முதல் பக்தர்கள் தரிசனமும், அஷ்டதளபாத பத்ம ஆராதனை சேவையும் ரத்து செய்யப்பட்டது.
கருவறையில் மூலவர் ஏழுமலையான் மீது பட்டுவஸ்திரங்களால் மூடப்பட்டது. கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தப்பட்டு பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகட்டை, சந்தனம் உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு புனிதநீர் கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
பிறகு ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மதியம் 12 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நாளை ஆனிவார ஆஸ்தான பூஜைகள் நடைபெற உள்ளதால் காலை 7 மணிக்கு கருடர் சன்னதி எதிரே உள்ள மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி சர்வபூபால வாகனத்திலும், விஷ்வக்சேனாதிபதியும் எழுந்தருள்வார்கள்.
அதன் பின்னர் உற்சவ மூர்த்திகள் மற்றும் மூலவர் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் மற்றும் வரவு, செலவு கணக்குகள் சமர்பிக்கப்படும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து தமிழக அரசு சார்பில் பட்டு வஸ்திரம் கொண்டு வரப்பட்டு சமர்பிக்கப்படும்.
மாலை 6 மணிக்கு மலையப்பசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில், மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். ஆனிவார ஆஸ்தானம் காரணமாக நாளை கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவையை ஆகியவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.