பொதுத்துறை வங்கியான யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ₹7.25 கோடி செலவில் India@100: Envisioning Tomorrow’s Economic Powerhouse புத்தகத்தின் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பிரதிகளை வாங்கியதற்காக விசாரணையை எதிர்கொண்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரும், சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நிர்வாக இயக்குநராக இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவருமான கிருஷ்ணமூர்த்தி வி சுப்பிரமணியன் எழுதிய இந்தப் புத்தகத்தை வாங்கியதற்காக வங்கியின் செலவு முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள்/உள்ளூர் பள்ளிகள்/கல்லூரிகள்/நூலகம் போன்றவற்றுக்கு மண்டல, பிராந்திய அலுவலகங்கள் மூலம் விநியோகிக்க முடிவெடுக்கப்பட்டு 189450 பிரதிகளை ரூ. 350க்கும் 10,422 பிரதிகளை ரூ. 597க்கும் வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டு அதற்காக 50% தொகையை வங்கி செலுத்தியுள்ளது.

யூனியன் வங்கியின் இந்த செலவு வீணான செலவு என்று கூறியுள்ள அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) இதுகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் பரிந்துரைக்கப்பட்ட நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்த சுப்பிரமணியன் தனது பதவிக்காலம் முடிவதற்கு ஆறு மாதம் இருக்கும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் யூனியன் வங்கியுடன் சேர்ந்து தனது புத்தகத்தை விளம்பரப்படுத்த சுப்பிரமணியன் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் காரணமாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.