டெல்லி
நேற்று முப்படை தளபதிகள் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி உள்ளார்.

காஷ்மீரை குறிவைத்து, பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்ததால் மத்திய அரசு எடுத்த கடும் நடவடிக்கையால் காஷ்மீரில் சமீபகாலமாக பயங்கரவாத செயல்கள் ஒடுக்கப்பட்டு இருந்தது. ஆயினும் கடந்த 22-ந் தேதி யாரும் எதிர்பாராத நிலையில் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதில் ஈடுபட்டது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டி.ஆர்.எப். என்பது தெரிய வந்துள்ளது. இந்தியா இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது என்று குற்றம் சாட்டி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.
பாகிஸ்தானுடன் செய்யப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததுடன், இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டது. இந்தியாவின் நிலை பற்றி உலக நாடுகளுக்கு விளக்குவதற்காக பல்வேறு நாட்டு தூதர்களின் கூட்டத்தையும் வெளியுறவுத்துறை நடத்தியது.
இந்த அதிரடி நடவடிக்கையால் கலக்கம் அடைந்த பாகிஸ்தான், தன் பங்குக்கு சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்து, பாகிஸ்தான் வான்பரப்பையும் மூடுவதாக அறிவித்தது. எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூட்டை நடத்த தொடங்கியது. இதற்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது..
நேற்று பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியின் இல்லத்தில் நடந்த முக்கிய ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சிடிஎஸ் ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் இந்திய விமானப்படைத் தலைவர் விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாகிஸ்தானுடன் பதற்றம் அதிகரித்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் அவரச ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆலோசனை கூட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.