பெங்களூரு: மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மேகதாது திட்ட பணிகளை உடனே தொடங்க தயாராக உள்ளோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மலைமாதேஸ்வர கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, பல்ஹாம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என்று கூறியவர், பயங்கரவாத செயலை வன்மையாக கண்டிக்கிறேன். புல்வாமா தாக்குதலும் அதே மாவட்டத்தில் தான் நடந்துள்ளது என்றார்.
காஷ்மீர் மாநிலத்தில், மத்திய அரசு அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்று கூறியதுடன், இந்த விஷயத்தில், மத்திய அரசின் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது தன முக்கியம். இதை மத்திய அரசு செய்திருக்க வேண்டும். சம்பவம் நடைபெற்ற பிறகு நடவடிக்கை எடுப்பது வேறு என்றார். (காஷ்மீர் மாநிலத்தில் உமர் அப்துல்லா தலைமையில் மாநில ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது)
ஏற்கனவே புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். தற்போது பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இனி இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டியது அவசியம்.
பயங்கரவாதிகள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களை ஒடுக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. அதற்கு தேவையான ஒத்துழைப்பை நாங்கள் வழங்க தயாராக உள்ளோம்.
பின்னர் செய்தியாளர்கள் மேகதாது அணை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய முதல்வர், மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மேகதாது திட்ட பணிகளை உடனே தொடங்க தயாராக உள்ளோம் என்றார். ஆனால், இதுதொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பேசியும் எந்த பலனும் இல்லை என்று கைவிரித்தார்.
அதுபோல மத்திய அரசு, கர்நாடக மாநிலத்தின் பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.5 ஆயிரத்து 300 கோடி வழங்குவதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவித்தது. . ஆனால் இதுவரை அந்த நிதியை வழங்கவில்லை. இது அரசியல் பழிவாங்கும் செயல்.
இவ்வாறு கூறினார்.