ஸ்ரீநகர்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பஹல்காம்  பயங்கரவாத  தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்போது, பயங்கரவாதத்தை வேரறுப்பது முக்கியம் என அவர் தெரிவித்தார்.

மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் சுற்றுலாத்தலமான,  ஜம்மு காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு அங்குள்ள சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது.  குறிப்பாக இந்து பயணிகளை சுட்டுத்தள்ளியது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  இந்த துப்பாக்கி சூட்டில், 28 பேர் பலியான நிலையில்,   சுமார் இருபது பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ள இந்தியா, அந்த நாட்டுடன் செய்து கொண்ட சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. மேலும் பாகிஸ்தான் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த  நிலையில், இன்று ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் வந்த எதிர்க்கட்சித தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த வர்களை  நேற்று நேரில்  சந்தித்து பேசினார். பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீநகரின் பதாமிபாக் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சென்ற ராகுல் காந்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டார்.

மேலும் ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ​​மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரையும் நேரில் சந்தித்து ராகுல் காந்தி பேசினார். அப்போது சம்பவம் குறித்து இருவரும் ராகுல் காந்தியிடன் விளக்கினார்கள்.

பின்னர்,  செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,”பயங்கரவாதிகள் செய்ய முயற்சிப்பதை நாம் முறியடிக்க ஒவ்வொரு இந்தியரும் ஒற்றுமையாக,  நிற்பது மிகவும் முக்கியம். காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளை சிலர் தாக்குவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது.  ”நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக நின்று, எடுக்கப்பட்ட இந்த மோசமான நடவடிக்கையை எதிர்த்துப் போராடி, பயங்கரவாதத்தை முற்றிலுமாக தோற்கடிப்பது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நான் முதலமைச்சரையும் துணைநிலை ஆளுநரையும் சந்தித்தேன், அவர்கள் என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு விளக்கினர், மேலும் காங்கிரஸ் கட்சியும் நானும் அவர்களுக்கு முழு ஆதரவளிப்போம் என்று இருவருக்கும் உறுதியளித்தேன்” என்று கூறினார்.

முன்னதாக,  பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து கட்சிகளுக்கு விளக்கமளிக்க மத்திய அரசு நேற்று முன்தினம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். பயங்கரவாதத்துக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு  தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். இதேபோல் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தெலுங்குதேசம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவையும் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.