ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக பறந்த ‘ஜாகுவார்’ போர் விமானம் ஒன்று மோர்னியின் பால்ட்வாலா கிராமத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் ‘விமானி’ அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இந்திய விமானப் படையின் போர் திறனை வெளிப்படுத்தும் விதமாக செயல்பட்டு வந்த ‘ஜாகுவார்’ போர் விமானம் பாகிஸ்தானுடன் கார்கில் மற்றும் சியாச்சின் போரில் தனது வலிமையை பறைசாற்றியது.

ஜாகுவார் என்பது குறைந்த உயரத்தில் பறக்கும் சூப்பர்சோனிக் (ஒலியின் வேகத்தை விட வேகமானது) போர் விமானமாகும்.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டின் கூட்டுத் தயாரிப்பான இந்த வகை விமானங்கள் உற்பத்திக்கான ஏற்பாடுகள் முதன்முறையாக 1960 இல் தொடங்கி 1968 முதல் 1981 வரை தயாரிக்கப்பட்டன.

ஆரம்பத்தில் இது பிரிட்டிஷ் ராயல் விமானப்படை மற்றும் பிரெஞ்சு விமானப்படையால் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பனிப்போரைக் கருத்தில் கொண்டு, இந்த போர் விமானம் அணுசக்தி திறன்களைப் பயன்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.