க்னோ

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ரூ. 200 அபராதம் விதித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிர மாநிலம், அலோகாவில், பாரத் ஜோடோ நடைப்பயணத்தின் போது செய்தியாளர்களுடன் பேசும்போது சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக லக்னோ மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தேசியவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான சாவர்க்கர் குறித்து திட்டமிட்டு அவதூறு கருத்துகளை ராகுல் காந்தி பரப்பியதாகவும், அந்த பேட்டி ஊடகங்களில் பரவலாக ஒளிபரப்பட்டதாகவும் வழக்கறிஞர் நிர்பேந்திர பாண்டே தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ராகுல் காந்தியை விசாரணைக்கு நேரில் ஆஜராக லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வெளிநாட்டு பிரமுகரை சந்திக்க முன்பே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால், ராகுல் காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி அவரது வழக்கறிஞர் மனு அளித்தார்.

இந்த மனுவை நிராகரித்த கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி அலோக் வர்மா, நேரில் ஆஜராக தவறியதற்காக ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதே குற்றச்சாட்டில் புனே நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.