முகல்சராய்
முகல்சராய் பகுதியில் நடந்த ரயில்வே தேர்வில் வினாத்தாள் கசிந்ததால் 26 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

நேற்று உத்தர பிரதேசத்தின் முகல்சராய் பகுதியில், கிழக்கு மத்திய ரெயில்வே சார்பில் தலைமை என்ஜின் ஆய்வாளர்கள் பணிகளுக்கான துறை ரீதியிலான தேர்வு நடந்தபோது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், 3 இடங்களில் சி.பி.ஐ. அமைப்பு சோதனை மேற்கொண்டது.
சோதனையில் முகல்சராய் பகுதியில் 3 இடங்களில் தேர்வு எழுத வந்த ரெயில்வே ஊழியர்கள் 17 பேர் அறையில், கையால் எழுதப்பட்ட வினாத்தாள்களின் புகைப்பட நகல்களுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே இதனை தொடர்ந்து, வினாத்தாள் கசிவு தொடர்பாக மூத்த டிவிசனல் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர் (டி.இ.இ.) ஒருவர் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் 8 பேர் மற்றும் தேர்வு எழுத வந்த பெயர் தெரியாத நபர்கள் மற்றும் சிலருக்கு எதிராக வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது.
நடத்தப்பட்ட தேர்வுக்கான வினாத்தாளை உருவாக்கும் மற்றும் தயாரிக்கும் பணிக்கான பொறுப்பானது, மூத்த டி.இ.இ. அதிகாரிக்கு அளிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் ஆங்கிலத்தில் கேள்விகளை எழுதியுள்ளார். இதன்பின்னர் ரெயில் என்ஜின் ஓட்டுநர் ஒருவரிடம் அதனை தந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
பிறகு அது இந்தியில் மாற்றம் செய்யப்பட்டு, சூப்பிரெண்டு அளவிலான அதிகாரியிடம் தரப்பட்டு உள்ளது. அவர், சில ரெயில்வே ஊழியர்கள் வழியே தேர்வு எழுத வந்தவர்களிடம் அவற்றை கொடுத்துள்ளார். இதில், மூத்த டி.இ.இ. மற்றும் ரயில்வே ஊழியர்கள் ஆகியோரை, பணம் வசூலிப்பு மற்றும் வினாத்தாள் விநியோகித்தல் ஆகியவற்றுக்காக சி.பி.ஐ. அமைப்பு கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.
இதுவரை ரயில்வே அதிகாரிகள் 26 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.