விக்கிரவாண்டி

வெக மாநாடு நடந்த திடலில் டன் கணக்கில் குப்பைகளும் உடைந்த நாற்காலிகளும் குவிந்துள்ளன.

நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். மிகவும் பிரமாண்டமாக நடந்த இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், ஸ்நாக்ஸ் வகைகள் அடங்கிய பிளாஸ்டிக் பைகள், உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

இந்ஹ மாநாடு முடிந்து திடலை விட்டு நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவரும் கலைந்து சென்றதும், மாநாட்டுத்திடல் முழுவதும் எங்கு பார்த்தாலும் குப்பைகளாக பரவிக்கிடந்தன சுமார் 85 ஏக்கர் பரப்பளவுள்ள மாநாட்டுத்திடல் மட்டுமின்றி திடலுக்கு வெளியே அதன் சுற்றுப்புற பகுதியிலும் ஆங்காங்கே குப்பைகள் பரவிக்கிடந்தன.

தவெக தொண்டர்கள் விட்டுச்சென்ற கட்சி கொடிகள், துண்டுகள், பேட்ஜ்கள் மற்றும் காலி குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், உணவுப்பொட்டல கழிவுகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பைகள் என சுமார் 3 டன் அளவில் குப்பைகள் சேர்ந்துள்ளன.

அத்துடன் விஜய்யை பார்க்க முண்டியடித்துக்கொண்டு வந்தவர்களை காவல்துறையினரும், பவுன்சர்களும் தடுத்ததால் ஆத்திரத்தில் அவர்கள் பிளாஸ்டிக் நாற்காலிகளை உடைத்தெறிந்து உடைந்துபோன நாற்காலிகளும், குப்பையோடு குப்பையாகவும் கிடந்தன.

நிறைய குப்பைகளாலும், மீதமான உணவுகளை வீசிச் சென்றதாலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.  திடல் மற்றும் திடலுக்கு வெளியே சுற்றுப்புற பகுதியில் கிடந்த குப்பைகளை மாநாட்டுக் குழுவினர், கூலித் தொழிலாளர்கள் மூலமாக பெரிய, பெரிய சாக்குப்பைகளில் அள்ளி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் செல்போன் பயன்பாடும் அதிகரித்து இணையதள சேவை முற்றிலும் முடங்கியது. நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருவரையொருவர் செல்போன் மூலம் தொடர்புகொள்ள முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.  தாங்கள் வந்த வாகனங்கள் எங்கு நிறுத்தப்பட்டுள்ளது என கண்டுபிடிக்க முடியாமல் பல நிர்வாகிகளும், தொண்டர்களும் தேடி, தேடி அலைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.