சென்னை: தேசிய தலைவர் மறைந்த பசும்பொன் தேவர் நினைவிடம் அமைந்துள்ள , பசும்பொன்னில்,  ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம்  திறந்து வைத்தார் .

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தெய்வீகத் திருமகனார் உ.முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தலைமை செயலாளர், அமைச்சர்கள், எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் ஆண்டுதோறும்  அவரது நினைவு நாளையொட்டி, குருபூஜை உள்பட பல்வேறு நிகர்ச்சிகள் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த  சிறப்பு விழாவிற்கு மரியாதை செலுத்த வருகை தரும் பொதுமக்கள் வசதிக்காக தற்காலிக கூடம் அமைக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், தற்காலிக கூடம் அமைக்கப்படுவதால், ஆண்டுதோறும் சிரமம் உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, தற்காலிக கூடத்தை நிலையான கூடமாக அமைக்கும் வகையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயம் முன்பு ரூ. 1.55 கோடி மதிப்பிட்டில், ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் இருக்கும் வகையில் 9.800 சதுர அடியில் முத்துராமலிங்கத் தேவர் அரங்கம் அமைத்து தரப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அதைத்தொடர்ந்து, அதற்கு ரூ.1.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரங்கம் கட்டப்பட்டது அதன் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று (அக்டோபர் 28) முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம்  அந்த அரங்கத்தை   திறந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் காதர் பாட்ஷா, முத்துராமலிங்கம் செ.முருகேசன், ஆட்சியர் அபிலாஸ் ஹபூர், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் வேலுச்சாமி, கமுதி ஒன்றிய சேர்மன் தமிழ்செல்வி போஸ், மாவட்ட கவுன்சிலர் வாசுதேவன், நினைவிட பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.