டெல்லி: நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 85 உள்நாட்டு விமானங்களுக்குவெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என மத்தியஅரசு தகவல் வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும் சமீப காலமாக பள்ளிகள், விமானங்கள் உள்பட முக்கிய அலுவலகங்களுக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்படுவது தொடர்கதையாகிறது.   சமீப நாட்களாக உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதனால், விமான பயணிகள் பதற்றம் அடைவ்துடன், விமானத்தை உடனே தரையிறக்கி சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் காலிஸ்தான் அமைப்பு நவம்பர் முதல்வாரத்தில் விமான பயணம் மேற்கொள்ளாதீர்கள் என மிரட்டல் விடுத்துள்ளது.

இந்த நிலையில், இன்று (அக். 24)  ஒரேநாளில் இந்தியா முழுவதும் 85 உள்நாட்டு விமானங்களுக்கு  வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் விமான நிறுவனங்களான  இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா, ஆகாசா ஏர் ஆகியவற்றின் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.  பெரும்பாலான மிரட்டல்கள்  சமூக வலைத்தளங்கள் மூலமாகவே  வந்துள்ளது.

 கடந்த 10 நாட்களில் 250-க்கும் மேற்பட்ட விமானங்கள்  வெடிகுண்டு புரளியால் பாதிக்கப்பட்டுள்ளன.  அதுபோல பல ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். விமான நிறுவனங்களுக்கு இது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஏனெனில் ஒரு விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் விமான சேவை பாதிப்பு, பயணிகளுக்குத் தேவையான வசதிகளை செய்து தருதல் என ரூ. 3 கோடி செலவாகிறது. அதுமட்டுமன்றி விமானத்தில் செல்ல பயணிகள் மத்தியில் சற்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இதுபோன்ற அனாமேதய மிரட்டல்களை விடுப்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்தியஅரசு தயாராகி வருகிறது.