சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் விவாகரத்து வழக்குகளில் தம்பதியரை நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியர் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் விசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சென்னை வர இயலவில்லை

எனவே காணொலி காட்சி மூலம் ஆஜராகிய நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து காணொலியில் ஆஜராகவில்லை எனக் கூறி, அவர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்ய குடும்ப நல நீதிமன்றம் மறுத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இதை எதிர்த்து மனைவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்ற வழக்குகளில்தான் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராவது கட்டாயம் எனவும், பிற வழக்குகளில், குறிப்பாக விவாகரத்து வழக்குகளில் காணொலி காட்சி மூலம் ஆஜராக வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், நேரில் ஆஜராக வேண்டும் என நிர்பந்திக்க கூடாது என்றும் குடும்பநல நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பரஸ்பர விவாகரத்து கோரி தம்பதியரின் பொது அதிகாரம் பெற்றவர்கள் வழக்குகளை தாக்கல் செய்யலாம் எனவும், காணொலி மூலம் வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.