சென்னை: சென்னையை சுற்றி உள்ள கடற்கரை பகுதிகளில் மேலும் 8 கடற்கரைகளை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருவதாக சிஎம்டிஏ செயலளர் தெரிவிர்தது உள்ளார்.

சென்னையில் ஏற்னவே காசிமேடு, மெரினா, பெசன்ட் நகர்,  இசிஆர் கடற்கரை  என பல இடங்களில் பொதுமக்கள் ஓய்வை கழிக்கும் வகையில் கடற்கரைகள் உள்ள நிலையில், மேலும் 8 கடற்கரைகளை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது.  அதன்படி,  எண்ணூர் முதல் கோவளம் வரை 8 கடற்கரைகளை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா கூறியுள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில், சென்னையை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்கான, சென்னை இன்ப்ரா நெக்ஸ்ட் 2024 என்ற கருத்தரங்கம்  சென்னையில் நடைபெற்றது.  அஇந்த கருத்தரங்கில், தொழிற்பேட்டைகளை நவீனப்படுத்துவது தொடர்பான வெள்ளை அறிக்கையை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய  அன்சுல் மிஸ்ரா.  “சென்னையை அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளில் இந்திய அளவில் அல்லாது, உலகளவில் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றும் தொலைநோக்குத் திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளது. இதற்காக சில முக்கியமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. அரசும் இதற்காக பல்வேறு கொள்கைகளை தொழில் வளர்ச்சிக்காக உருவாக்கினாலும், திட்டமிடலுக்கான கொள்கை வகுக்கப்படவில்லை.

குறிப்பாக, இருக்கும் நிலத்தை சரியான வகையில் பயன்படுத்துதல் இதில் முக்கியமானதாகும். முதல்முறையாக சென்னைக்கான 3-வது பெருந்திட்டம் தயாரிக்க பல்வேறு வகையான ஆய்வுகளை நடத்தியுள்ளோம். நாட்டில் முதல் முறையாக பொருளாதார வளர்ச்சிக்கான உத்தி சென்னை பெருநகர பகுதிகள் முழுமையாக உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நகரத்தை மேலும் மேம்படுத்துவதற்கான திட்டங்களுடன்,‘காம்ப்பாக்ட்’ நகரமாக உருவாக்க முடியும். தொழிற்சாலை, வீட்டுவசதி இவை எங்கு அமைய வேண்டும். இந்த நிலம் இதற்கு உகந்தது. இந்த வசதிகளை இங்கு அமைக்கலாம் என்பதற்கான வரைப்படம் உருவாக்கி, அதன் அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னையில் பொதுமக்கள் அடர்வு மற்றும் நில மதிப்புக்கு இடையிலான தொடர்பு குறித்து ஆய்வு செய்கிறோம். இவற்றின் அடிப்படையில், சிறந்த வாழ்க்கைக்கான, முதலீட்டுக்கான நகரமாக உருவாக்க பெரிய அளவிலான கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம். இதில் முக்கியமானது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். அதேபோல் கடற்கரைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில், எண்ணூர் முதல் கோவளம் வரையிலான பகுதியில் 8 கடற்கரைகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர 12 ஏரிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இவை தவிர்த்து, சென்னையில், அலுவலகம் மற்றும் வீட்டுவசதியில் கூடுதல் தளங்களை உருவாக்குவதற்கு, ‘காம்பாக்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நகரை ஒட்டிய முக்கியமான பகுதிகளில், அடர்வை உருவாக்கும் வகையில் கூடுதல் தளப்பரப்பு குறியீடு வழங்குவது குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், தொழிற்சாலை, வீட்டுவசதி அடர்வை ஏற்படுத்துவதற்கான, பல்வேறு வழித்தடங்களும் கண்டறியப்பட்டு வருகின்றன.

இதுதவிர, பல்வேறு வசதிகளுடன் கூடிய துணைக்கோள் நகரங்கள் அமைக்க, திருமழியை, மீஞ்சூர் உள்ளிட்ட 6 புதிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பகுதிகளில், சிறந்த தரமான வாழ்க்கைக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. மற்ற நகரங்களை ஒப்பு நோக்கும் போது, சென்னையில் 20 ஆயிரம் முதல் 23 ஆயிரம் வீடுகளை மட்டுமே உருவாக்குகிறது.

ஹைதராபாத், பெங்களூருவில் 80 ஆயிரம், மும்பையில் 1.25 லட்சம் புனே மற்றும் அகமதாபாத் நகரங்களில் 60 வீடுகள் கட்டப்படுகின்றன. சென்னையில் 10 ஆண்டுகளில் 20 சதவீதம் மக்கள் தொகை உயரும் போது, மக்கள் எங்கு வாழ்வார்கள் என்பதை கவனிக்க வேண்டும். சென்னையை விட்டு வெளியில் செல்வார்கள் இல்லாவிட்டால் சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள திட்டமிடப்படாத பகுதிகளில் வசிப்பார்கள். இது மிகப்பெரிய சவாலாகும்.

எனவே, இதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும். ஐடி உள்ளிட்ட தொழில்துறையில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில் வீட்டு வசதித் துறையிலும் கவனம் செலுத்த வேண்டும். அதே போல், வீட்டுவசதி மற்றும் அலுவலக பயன்பாட்டுக்கான இடங்களை அதிகரிக்க, குறைந்த விலையில் நிலம் கிடைப்பது, கூடுதல் தளப்பரப்பு குறியீடு வழங்க வேண்டியது அவசியமாகிறது” என்று அன்சுல் மிஸ்ரா கூறினார். இந்நிகழ்ச்சியில், சிஐஐ தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் ஸ்ரீவத்ஸ்ராம், சென்னை மண்டல தலைவர் மிலன் வாஹி, துணைத் தலைவர் அஜித் சோர்டியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.