மும்பை;

மகாராஷ்டிர தேர்தலுக்காக பாஜக முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுளது.

வரும் நவம்பர் 20ம் தேதி மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே மாநிலம் முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 99 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் வந்தேரா தெற்கு தொகுதியில் மும்பை பாஜக தலைவர் ஆஷிஷ் செலார், கான்காவ்லி தொகுதியில் பாஜக மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினரான நாராயண ராணேவின் மகன் நிதின் ராணே போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிர பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே கம்தி தொகுதியிலும், முன்னாள் தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கொத்ரூட் தொகுதியிலும், முன்னாள் முதல்வர் அஷோக் சவானின் மகள் ஸ்ரீஜெயா சவான் போகார் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

பாஜக இந்தத் தேர்தலில் மொத்தமாக 150 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ளது. எனவே, மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியுடனும் துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையிலான என்சிபி கட்சியுடனும் பாஜக கடுமையான தொகுதி பேரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.