திருவனந்தபுரம்

கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு 101 வயதானதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியின் பழம்பெரும் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் இன்று 101-வது பிறந்த நாளை கொண்டாடுவதால் அவருக்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

மேலும் கோவா ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, கேரள அமைச்சர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கை உருவாக்க குழுவின் முன்னாள் உறுப்பினர் எஸ். ராமசந்திரன் பிள்ளை மற்றும் கேரள இந்திய கம்யூனிஸ்டுவின் செயலாளர் பினோய் விஸ்வம் உள்ளிட்டோர் அச்சுதானந்தனின் வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தன், வர்த்தக யூனியன் செயல்பாடுகளின் வழியே அரசியலுக்கு வந்தவர். அவர் கேரள சட்டசபையின் உறுப்பினராக 7 முறையும் மற்றும் கேரளாவின் 11-வது முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.

அச்சுதானந்தன் இடுக்கி மாவட்டத்தின் மூணாறு பகுதியில் நில ஆக்கிரமிப்புகளை நீக்குவதற்காக இயக்கம் ஒன்றை தொடங்கியதால்  அவர் முதல்வராக இருந்தபோது, கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.  ஆயினும் அவருடைய கட்சித் தொண்டர்கள் அவருடைய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.