மேட்டூர்

மேட்டூர் அணையில் கால்வாய் பாசனத்துக்கான நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த மழை காவிரி நீர் கால்வாய் பாசன பகுதிகளிலும் பெய்தது. எனவே மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு கடந்த 15-ந் தேதி வினாடிக்கு 300 கனஅடியாக குறைக்கப்பட்டது.

மழையின் அளவு தற்போது குறைந்துள்ளதால் கால்வாய் பாசன பகுதிகளில் மீண்டும் தண்ணீர் தேவை அதிகரித்தது. இதைக் கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 95.88 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரத்து 384 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடியும் என வினாடிக்கு 1,100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.