கொழும்பு: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு,  இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள், இந்திய அரசின் வலியுறுத்தலால் மீட்கப்பட்ட நிலையில்,  சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட  17 மீனவர்கள்  இனு று காலை சென்னை வந்தடைந்தனர். பின்னர், அவர்கள் , அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி, தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 17 மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதிகாலையில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் வந்து, ராமேஸ்வரம் மீனவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.   எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி, 17 மீனவர்களையும் , அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், அவர்களை  இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 17 மீனவர்களையும் சிறையில் அடைத்தனர்.

தமிழக மீனவர்களை விடுக்க வலியறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும்போல,   பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு   கடிதங்கள் எழுதினார். இதைத்தொடர்ந்து,  இலங்கை அரசின் அறிவுறுத்தலின் பேரில்,   இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து,  கடந்த சில நாட்களுக்கு முன்பு, இலங்கை நீதிமன்றம், ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரையும் விடுதலை செய்து, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களை அங்கிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு  இந்திய தூதரக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அதனப்டி இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்த  மீனவர்களை, தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவர்களது சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர்.