சென்னை: துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாரம்பரிய முறைப்படி உடை அணிய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

துணைமுதல்வர் உதயநிதி, பொதுவாக  திமுக சின்னம் பொருத்தப்பட்ட டிசர்ட்டையே அணிந்து வருகிறார்.  அரசு பணியின்போதும் அவர் டிசர்ட் அணிந்து வருவது பேசும் பொருளாக மாறி வருகிறது. அதனால், அவர் பாரம்பரிய முறைப்படி, அமைச்சர்களுக்கு உரிய உடை அணிய வேண்டும் என ஏற்கனவே  அதிமுக முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்,  தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

தற்போது அவர் துணை முதல்வராக உள்ள நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது முறைப்படியான ஆடைக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர்  சத்யகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையால் வெளியிடப்பட்ட 2019 ஜூன் 1-ஆம் தேதியிட்ட அரசு உத்தரவு எண் 67, அனைத்து அரசு ஊழியர்களும் நேர்த்தியான, சுத்தமான, முறைப்படியான உடைகளை உடுத்த வேண்டும் என்று கூறுகிறது.

அரசாணையின்படி, ஆண் ஊழியர்கள் தமிழ் கலாசாரம் அல்லது இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் முறைப்படியான உடைகள் (formal dress) பேண்ட் அல்லது வேஷ்டி உடுத்த வேண்டும். ஆனால், தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், அனைத்து அரசு நிகழ்ச்சிகளில் டி – சர்ட் அணிந்து வருவதாகவும், தமிழ்நாடு தலைமைச் செயலத்தின் பரிந்துரைக்கப்பட்ட ஆடை வரன்முறையை அமைச்சர் அலுவலகத்திலும், துணை முதல்வர் அறையிலும் அவர் பின்பற்றாமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதியின் டி – சர்ட்களில் பெரும்பாலும் திமுகவின் சின்னம் இருக்கும் என்றும், மக்கள் பணியாளர் என்ற முறையில் அவர் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சின்னம் கொண்ட உடையை உடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

உதயநிதியின் செயல்கள் அரசியலமைப்புக்கு எதிரானவை, சட்ட விரோதமானவை, சட்டத்திற்கு புறம்பானவை மற்றும் அரசாணைக்கு எதிரானது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், முறைப்படியான ஆடை வரன்முறையைக் கடைப்பிடிக்குமாறு உதயநிதிக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுமீது விரைவில் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக ஒருவர் அமைச்சராக பதவி ஏற்கும்போது,  பதவி ஏற்பு விழாக்களில், ”இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும், உண்மையாகவும் உளச்சான்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்கி, அச்சமும் ஒருதலைச்சார்பும் இன்றி, விருப்பு வெறுப்பை விலக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதைச் செய்வேன்” என பதவி ஏற்றுக்கொள்பவர்கள் உறுதிமொழி எடுப்பார்கள்.

அதன்படி, அமைச்சராக இருப்பவர் எந்தவொரு அரசியல் கட்சியையும் முன்னிலைப்படுத்தாமல், விருப்பு வெறுப்பின்றி, அனைத்து மக்களையும் அரவணைத்து செல்பவராக இருக்க வேண்டும். ஆனால், உதயநிதி எப்போதும், தான் திமுக காரன் என்பதை நினைவுபடுத்தும் வகையில், டிசர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சராக பொறுப்பேற்கும்போது, எடுக்கப்படும்  உறுதிமொழியை  துணைமுதல்வர் உதயநிதி மறந்து விட்டாரோ என்றும், அதை சுட்டிக்காட்டி திமுகவிலோ, ஆட்சியில் உள்ள  உயர் அதிகாரிகள் யாருக்கும் தைரியும் இல்லையா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.