சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தில் விடுபட்ட ‘திராவிடநல் திருநாடு..’  விவகாரம் சர்ச்சையான நிலையில்,  தவறுக்காக  பொதிகை தொலைக்காட்சி மன்னிப்பு கோரி உள்ளது.

பொதிகை தொலைக்காட்சியில், இன்று  ஆளுநர் ரவி பங்கேற்ற இந்தி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாடலில்  ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது. இதற்கு தமிழக முதல்வர் உள்பட தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, பொதிகை தொலைக்காட்சி  தவறுக்காக மன்னிப்பு கோரி உள்ளது.

சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் ‘ஹிந்தி மாத’ நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திராவிடம் குறித்து தொடர்ந்து கடும் விமர்சித்து வரும் சூழலில் தற்போது திராவிடம் என்று வார்த்தை இடம்பெற்ற வரி தற்செயலாக அல்லாமல் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தொடர்ந்து நிகழ்ச்சியின்போது பேசிய ஆர்.என்.ரவி, இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் கொண்டாடப்பட வேண்டிய மொழிகள்தான். இந்தி திணிக்கப்படவில்லை. தமிழக மக்களிடையே, இந்தி மொழியை கற்க வேண்டும் என்ற எண்ணம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளேன். இந்தி மொழியை மக்கள் கற்கின்றனர்.

இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க கடந்த 50 ஆண்டுகளில் பல முறை முயற்சி நடந்துள்ளது. இந்தியாவை பிரிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் நீக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தன. முதல்வர் ஸ்டாலினும் ஆளுநர் ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, பொதிகை தொலைக்காட்சி தவறுக்காக மன்னிப்பு கோரி உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பொதிகை தொலைக்காட்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வார்த்தை விடுபட்டதற்காக மன்னிப்பு கோருகிறோம் – “தமிழையோ, தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் நோக்கம், அதை பாடியவர்களுக்கு துளியும் கிடையாது” என குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்த்தாய் வாழ்த்தில் இருந்து திராவிடத்தை தவிர்த்து சீமான் பாடியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆளுநர் நிகழ்ச்சியில் திராவிடம் வார்த்தை நீக்கப்பட்டது  தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.