சென்னை: ‘காலநிலை மாற்ற வீராங்கனைகள்’ திட்டத்தை செயல்படுத்த ரூ.3.87 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, சுய உதவிக்குழுவினர் ஆட்டோ மூலம் சென்று  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு சுயஉதவிக் குழுக்களுக்கு வாய்ப்பு  அளிக்கும்வ கையில், “காலநிலை மாற்ற வீராங்கனைகள்”  என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதற்காக அந்த திட்டத்திற்கு ரூ. 3.87 கோடி ஒதுக்கீடு செய்து  அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த, அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மகளிரின் முக்கியப் பங்கை உணர்ந்து மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மூலம் “காலநிலை மாற்ற வீராங்கனைகள்” என்ற விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார்.

மேலும்,  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக முதற்கட்டமாக 500 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இந்த சுற்றுச்சூழல் பற்றிய பரப்புரையை முன்னெடுப்பார்கள் என்றும் இதற்காக அவர்களுக்கு மின் ஆட்டோ வழங்கப்படும் என்றும்  தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் , சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் “காலநிலை மாற்ற வீராங்கனைகள்” திட்டத்தை செயல்படுத்த ரூ.3.87 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதில், 100 மின்சார ஆட்டோ வாங்க ரூ.3.77 கோடியும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக 10.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.